அடிப்படை வசதிகள் நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
கோவை, அக்.14-
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி 4-வது வார்டில் தென்றல் நகர் குடியிருப்பு பகுதி கடந்த 2015-ம் ஆண்டு முதல் உருவாகி 165-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டி, குடியிருந்து வருகின்றனர்.
இந்த வீடுகளுக்கு உரிய சொத்து வரிகள் விதித்து, குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்க்கான வசதிகள் செய்து தருவதாக கலங்கல் ஊராட்சியில் வரி வசூல் செய்தனர், ஆனால் இதுவரை எந்தவொரு அடிப்படை வசதிகள் செய்து தராமல் ஏமாற்றி வருவதாக பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கலங்கல் ஊராட்சி, தென்றல் நகர் குடியிருப்பு மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். அதன்படி பதில் அளித்த சூலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கலங்கல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தென்றல் நகர் குடியிருப்பு பகுதிக்கு முறையாக குடிநீர் வசதிகள் செய்து தந்ததாக அறிக்கை அனுப்பினார். இதனை கண்ட குடியிருப்பு மக்கள் அதிர்ச்சி அடைந்து இதை கண்டித்தும், பொய்யான அறிக்கையாக, அடிப்படை வசதிகளும், குறிப்பாக குடிநீர் வசதி கடந்த 10 ஆண்டுகளாக செய்து தராமல், ஏமாற்றி வரும் சூலூர் ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், கலங்கல் ஊராட்சி கிராமத்தில் உள்ள தென்றல் நகர் பகுதிக்கு மழை காலம் தொடங்கிய நிலையில் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரவும், சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மீண்டும் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து தென்றல் நகர் குடியிருப்பு மக்கள் கூறுகையில், நாங்கள் 10 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகிறோம். மேலும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை மனு எந்த பலனும் இல்லை. தற்போது வட்டார வளர்ச்சி அலுவலர் குடிநீர் வசதி நிறைவேற்றியதாக பொய்யான அறிக்கை தந்தவரை நடவடிக்கை எடுத்து, மழை காலம் தொடங்கி விட்டதால், சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது, விஷப்பூச்சிகளால் பெண்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு அச்சமாக இருக்கிறது.
எனவே பொய் அறிக்கை தந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Comments